நேபாளத்தில் நிலச்சரிவால் ஆற்றில் விழுந்த பஸ்கள்; 63 பயணிகளின் கதி என்ன?


நேபாளத்தில் நிலச்சரிவால் ஆற்றில் விழுந்த பஸ்கள்; 63 பயணிகளின் கதி என்ன?
x

நேபாளத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கடந்த ஒரு மாத காலமாக கனமழை பெய்து வருகிறது.

காத்மாண்டு,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கனமழை கொட்டி வருகிறது. நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, மதன் - ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, இன்று அதிகாலை 3.30 மணியளவில், சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு பஸ்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது, கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு, சாலையின் பெரும்பகுதி ஆற்றில் வெள்ளப்பெருக்குடன் அடித்துச் செல்லப்பட்டபோது, சாலையில் சென்று கொண்டிருந்த பஸ்களும் ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு பஸ்களிலும் 63 பயணிகள் பயணம் செய்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பயணிகளின் நிலை என்ன? என்று தெரியவில்லை. தற்போதைக்கு எந்த தகவலையும் கூற முடியாது என்று மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், கனமழையால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, காத்மாண்டு - பரத்பூர் மற்றும் சித்வான் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.நேபாளத்தில் பருவமழை தொடங்கி கடந்த 4 வாரங்களில் மட்டும் மழை மற்றும் அது தொடர்பான சம்பவங்களில் 74 பேர் பலியாகியுள்ளனர். 80 பேர் காயமடைந்துள்ளனர். பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மின்னல் தாக்குவது போன்ற நிகழ்வுகளே காரணமாக இருந்துள்ளன.


Next Story