ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையில் மேலும் 20 ஊழியர்களுக்கு கொரோனா
ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையில் மேலும் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
காபூல்,
ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே உள்நாட்டு போர் மற்றும் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தற்போது கொரோனா வைரசும் அங்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் தலைநகர் காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் பணியாற்றி வந்த 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த சில தினங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் அதிபர் மாளிகையில் மேலும் 20 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “அதிபர் மாளிகையில் பணிபுரியும் மேலும் 20 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் மக்களிடம் பீதியை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு, இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிடாமல் உள்ளது” என கூறினார்.
கொரோனா வைரஸ் பாதித்துள்ள ஊழியர்களுடன் அதிபர் அஷ்ரப்கனி நேரடி தொடர்பில் இருந்தாரா? என்பது குறித்தும், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? என்பது பற்றியும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
Related Tags :
Next Story