தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட சோழர் கால கடவுள் பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு


தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட சோழர் கால கடவுள் பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
x

தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 12-ம் நூற்றாண்ட்டை சேர்ந்த இந்து மத கடவுள் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டம் தண்டன்தோட்டம் பகுதியில் நந்தனபுரிஸ்வரர் என்ற இந்து மத கடவுள் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் இருந்து 1971-ம் ஆண்டு கடவுள் பார்வதியின் சிலை உள்பட 5 சிலைகள் திருடுபோனது.

இந்த திருட்டு குறித்து 2019-ம் ஆண்டு கோவில் அறங்காவலர் தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடத்தப்பட்ட சிலைகள் எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

திருபோன சிலைகளில் கடவுள் பார்வதியின் சிலை 52 செண்டிமீட்டர் உயரம் கொண்டதாகும். 12-ம் நூற்றாண்டு சோழர் காலத்தை சேர்ந்த இந்த சிலையின் தற்போதைய மதிப்பு 1.69 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நந்தனபுரிஸ்வரர் சிவன் கோவிலில் இருந்து 1971-ம் ஆண்டு திருடப்பட்ட கடவுள் பார்வதியின் சிலை 50 ஆண்டுகளுக்கு பின் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடவுள் பார்வதியின் சிலை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் கிளையை கொண்டுள்ள பொன்ஹம்ஸ் என்ற சர்வதேச ஏல நிறுவனத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

ஏல நிறுவனத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அந்த சிலையை மீட்டு மீண்டும் நந்தனபுரிஸ்வரர் கோவிலுக்கே கொண்டுவர தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story