மோட்டார் சைக்கிளில் சென்றபடி பட்டாசு வெடித்த இளைஞர்கள்


மோட்டார் சைக்கிளில் சென்றபடி பட்டாசு வெடித்த இளைஞர்கள்
x

விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபடி இளைஞர்கள் பட்டாசு வெடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம்

தீபாவளியன்று விழுப்புரம் நகரில் நள்ளிரவில் நான்குமுனை சந்திப்பு பகுதியில் இருந்து பழைய பஸ் நிலையத்தை கடந்து கிழக்கு புதுச்சேரி சாலை வரை ஒரு மோட்டார் சைக்கிளில் 2 இளைஞர்கள் வலம் வந்தனர். அதில் ஒருவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டினார். மற்றொரு இளைஞர், பின்னால் அமர்ந்தபடி, தனது கையில் வாணவெடியை வெடிக்க செய்தபடியே சென்றார். மின்னல் வேகத்தில் செல்லும் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வதைபோல் விபரீத விளையாட்டில் 2 இளைஞர்கள் சாலையில் வலம் வந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோவை கொண்டு அதில் பதிவாகியுள்ள மோட்டார் சைக்கிளின் எண் மூலம் அந்த 2 பேர் குறித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் விழுப்புரம் சேவியர் காலனியை சேர்ந்த நிவேஷ் (வயது 20), நாப்பாளைய தெருவை சேர்ந்த பயாஸ்அகமது (22) என்பதும், இவர்களில் நிவேஷ், மோட்டார் சைக்கிளை ஓட்டியதும், பின்னால் அமர்ந்திருந்த பயாஸ்அகமது பட்டாசை வெடிக்கச்செய்தவாறு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து நிவேஷ், பயாஸ்அகமது ஆகியோரின் மீது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தல், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பட்டாசை வெடித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story