விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள்துறை அறிவிப்பு


விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள்துறை அறிவிப்பு
x

விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார். இதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.03 சதவீதம் ஆகும். மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்து உள்ளனர். 4 லட்சத்து 5 ஆயிரத்து 753 மாணவிகள் இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இது 96.38 சதவீதம் ஆகும். மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 697 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது 91.45 சதவீதம் ஆகும்.

மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி அடைந்து உள்ளார். மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் 93.76 ஆகும்.

இந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் 13-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள்துறை அறிவித்துள்ளது. விடைத்தாள் நகலுக்கு ரூ.275 ரூபாயும், மறுகூட்டலுக்கு ரூ.205 ரூபாயும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305 கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story