தலையில் கல்லை போட்டு பெண் கொலை


தலையில் கல்லை போட்டு பெண் கொலை
x
தினத்தந்தி 17 Oct 2022 6:45 PM GMT (Updated: 17 Oct 2022 6:51 PM GMT)

திண்டுக்கல் அருகே தலையில் கல்லை போட்டு பெண்ணை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

2-வது திருமணம்


புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 51). லாரி டிரைவர். இவரது மனைவி உமா (45). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் தனியார் மில்லுக்கு பழனியப்பன் வேலைக்கு சென்றார்.


அப்போது அந்த மில்லில் பணிபுரிந்த திருவாரூரை சேர்ந்த சுகந்தி என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரை, பழனியப்பன் 2-வது திருமணம் செய்தார். பின்பு புதுச்சேரியில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்தனர். அவர்கள் என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரில் குடியேறினர். இவர்களுக்கு ரித்திஷ் (13) என்ற மகன் உள்ளார். பழனியப்பன் அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் லாரி டிரைவா் வேலைக்கு சென்று வந்தார்.


தலையில் கல்லை போட்டு கொலை


இந்த நிலையில் பழனியப்பனுக்கு சுகந்தியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் வீட்டில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி சுகந்தி, கோபித்து கொண்டு மகனுடன் திருவாரூருக்கு சென்றார்.


நேற்று முன்தினம் இரவு சுகந்தி மட்டும் திண்டுக்கல்லுக்கு வந்தார். இந்த நிலையில் இரவு வழக்கம்போல் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் தூங்க சென்றனர். மனைவியின் மீது ஆத்திரத்தில் இருந்த பழனியப்பன் திடீரென்று கண் விழித்தார். பின்னர் தூங்கி கொண்டிருந்த சுகந்தியின் தலையில் வீட்டில் இருந்த குழவி கல்லை எடுத்து போட்டார். சுகந்தி, அய்யோ, அம்மா என்று அலறினார். இதில் படுகாயம் அடைந்த சுகந்தி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். சுகந்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். உடனே இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.


கணவர் கைது


அதன்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியப்பனை கைது செய்தனர். பின்னர் சுகந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் தலையில் கல்லை போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Next Story