போலீஸ் சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பெண் மயக்கம்


போலீஸ் சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பெண் மயக்கம்
x

போலீஸ் சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பெண் மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

போலீஸ் சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பெண் மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்கனவே மனு அளித்திருந்த 46 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனே தீர்வுகாண சம்மந்தப்பட்ட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் புதிதாக 18 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறுகையில், ''போலீஸ் நிலையத்திற்கு வந்து பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை போலீசார் பெற்று கொண்டு விரைந்து தீர்வு காண வேண்டும். பொதுமக்களை அலைகழிக்ககூடாது. அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்'' என கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் செந்தில், சரவணன், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மனுகொடுக்க வந்த ஒரு பெண் திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அப்பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story