மதுரவாயலில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் சாவு - 2 ஓட்டுநர்கள் கைது


மதுரவாயலில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் சாவு - 2 ஓட்டுநர்கள் கைது
x

சென்னை மதுரவாயலில் சாலை விபத்தில் பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் உயிரிழந்த வழக்கில் 2 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை மதுரவாயலில் சாலை விபத்தில் பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் உயிரிழந்த வழக்கில் விபத்துக்கு காரணமான வேன் மற்றும் லாரி ஓட்டுநர்கள் மோகன், பார்த்திபன் ஆகிய 2 பேரை பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழக்கின் முழுவிவரம்:-

போரூரை சேர்ந்தவர் ஷோபனா (வயது 22). இவர் கூடுவாஞ்சேரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவரது தம்பி அரிஷ் (17). முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை ஷோபனா தனது தம்பி அரிஷை மொபெட்டில் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்தபோது, வேன் ஒன்று மொபட்டை முந்தி சென்ற போது மொபெட் மீது உரசியதில் இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது பின்னால் மணல் ஏற்றி வந்த லாரி ஏறி இறங்கியதில் சக்கரத்தில் சிக்கி ஷோபனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

இந்த விபத்தில் அவரது தம்பி அரிஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று இறந்துபோன ஷோபனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை விபத்தில் தம்பி கண் முன் கம்ப்யூட்டர் என்ஜினீயர் இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்து நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.





Next Story