காவிரி ஆற்றில் தத்தளித்த 3 மாணவர்கள் மீட்பு


காவிரி ஆற்றில் தத்தளித்த 3 மாணவர்கள் மீட்பு
x

தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் தத்தளித்த 3 மாணவர்கள் மீட்கப்பட்டனர்.

கரூர்

8 மாணவர்கள்

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியில் தனியார் உடற்கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த அஜித் குமார் (வயது 21), விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்த கணேஷ் (18), அதே பகுதியைச் சேர்ந்த கமலேஷ் (18), சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியை சேர்ந்த தீபன்ராஜ் (20), அதே பகுதியை சேர்ந்த பெரியமலை (18), அரவிந்த் (18), அண்ணாமலை (20), தென்காசி பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் (18) ஆகிய 8 பேரும் படித்து வருகின்றனர். இதனால் 8 பேரும் புன்னம் சத்திரத்தில் உள்ள தனியார் வாடகை கட்டிடத்தில் அறை எடுத்து தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

3 பேர் மீட்பு

இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு விடுமுறை என்பதால் 8 பேரும் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது விமல்ராஜ் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார்.

இதைக்கண்ட கமலேஷ், அரவிந்த் ஆகியோர் நீந்தி சென்று அவரை காப்பாற்றினர். பின்னர் 3 பேரும் கரைக்கு வர முடியாமல் ஆழமான தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் தத்தளித்த 3 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story