கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா?


கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா?
x

கோப்புப்படம்

பல மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

மாநில கவர்னராக நியமிக்கப்படுபவர்கள் 5 ஆண்டு காலம் அப்பதவியில் இருக்கலாம். அதன்பின்னர், புதியவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் அல்லது மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மீண்டும் கவர்னராக அவரே நியமிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் இம்மாதம் 31-ம் தேதி நிறைவடைகிறது. தற்போது, டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி, பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து இருக்கிறார். எனவே, அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல், கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கானின் பதவிக்காலமும் விரைவில் முடிவடைகிறது. ஏற்கனவே, ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், காலியாக உள்ள தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் ஆகிய பதவிகளையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.

இதுதவிர வேறு சில மாநில கவர்னர்களின் பதவிக்காலமும் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு, தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்கலாமா? என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story