நாங்கள் இருக்கும் போது அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு அமலாக்கத்துறை ரெய்டு வந்து விடுமா - கே.எஸ்.அழகிரி கேள்வி


நாங்கள் இருக்கும் போது அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு அமலாக்கத்துறை ரெய்டு வந்து விடுமா - கே.எஸ்.அழகிரி கேள்வி
x
தினத்தந்தி 3 Aug 2022 2:56 PM GMT (Updated: 3 Aug 2022 2:57 PM GMT)

ஆயிரம் மடங்கு பலம் பொருந்திய நாங்கள் இருக்கும் போது அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு அமலாக்கத்துறை ரெய்டு வந்து விடுமா? என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பால், தயிர் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது வரியை உயர்த்தி விட்டு ஏழைகளுக்கு பாதிப்பு இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு அமலாக்கத்துறை ரெய்டு வரும் என்கிறார் அண்ணாமலை. இவர் என்ன உள்துறை மந்திரியா? அப்படித் தான் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி வீட்டிற்கு ரெய்டு வந்துவிடுமா? இது ஒன்றும் மராட்டியமோ, மேற்கு வங்காளமோ அல்ல. தமிழகத்தில், தி.மு.க.வுடன் நாங்கள்(காங்கிரஸ்) கம்யூனிஸ்டு இயக்கங்கள், விடுதலை சிறுத்தைகள் என அவர்களை(பா.ஜ.க.) விட ஆயிரம் மடங்கு பலம் பொருந்தியவர்கள் உள்ளோம்.

சிவசேனாவை மிரட்டுவது போல், தி.மு.க.வை மிரட்ட நினைக்கிறார்கள். இதற்கு எல்லாம் தி.மு.க. பயப்படப் போவதில்லை.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர், திருவள்ளுவர் சிலைகள், மராட்டியத்தில் உள்ள வீர சிவாஜி சிலைகளையெல்லாம் ஏற்றுக்கொள்வோம்; ஆனால், கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச் சின்னம் வைத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பவர்களின் டி.என்.ஏ.வை பரிசோதனை செய்ய வேண்டும்.

நீண்ட காலம் தமிழ் சமூகத்திற்காக, தமிழர்களுக்காக உழைத்த ஒரு மனிதருக்கு, அவரது நினைவாக, அவர் அதிகம் எழுதிய பேனாவை நினைவுச் சின்னமாக வைப்பதில் என்ன தவறு இருக்கிறது? இதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story