காட்டு யானைகள் மோதல்


காட்டு யானைகள் மோதல்
x
தினத்தந்தி 7 Aug 2023 9:00 PM GMT (Updated: 7 Aug 2023 9:00 PM GMT)

தேவர்சோலையில் ஊருக்குள் புகுந்த 2 காட்டு யானைகள் திடீரென ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

நீலகிரி

கூடலூர்

தேவர்சோலையில் ஊருக்குள் புகுந்த 2 காட்டு யானைகள் திடீரென ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை, பாடந்தொரை, மேபீல்டு, தேவன்-1 உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயிர்களையும், பொதுமக்களின் வீடுகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், எந்த பலனும் கிடைப்பது இல்லை. கடந்த சில மாதங்களாக தேவர்சோலையில் பட்டப்பகலில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனால் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்தநிலையில் நேற்று தேவர்சோலை தனியார் பள்ளிக்கூடத்துக்கு பின்புறம் உள்ள மேய்ச்சல் நிலத்திற்கு 2 காட்டு யானைகள் வந்தன.

ஆக்ரோஷமாக மோதியது

பின்னர் அப்பகுதியில் உள்ள பசுமையான தாவரங்களை மேய்ந்து கொண்டிருந்தது. நீண்ட நேரம் அப்பகுதியில் முகாமிட்டு இருந்த நிலையில் திடீரென 2 காட்டு யானைகளும் ஆக்ரோஷம் அடைந்தன. தொடர்ந்து சிறிது நேரத்தில் ஒன்றுக்கு ஒன்று தும்பிக்கையால் கடுமையாக மோதிக் கொண்டன. அப்போது யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு, பொதுமக்கள் பீதி அடைந்தனர். மேலும் அவர்கள் தொலைவில் நின்று பார்த்தனர். இருப்பினும், காட்டு யானைகள் தும்பிக்கை மற்றும் தந்தங்களால் தாக்கிக் கொண்டது.

பின்னர் ஒரு யானை பின் வாங்கியவாறு அங்கிருந்து ஓடியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story