கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி சாவு: ஒரே குழியில் உடல்கள் அடக்கம்


கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி சாவு: ஒரே குழியில் உடல்கள் அடக்கம்
x
தினத்தந்தி 17 Jan 2024 11:13 AM GMT (Updated: 17 Jan 2024 12:22 PM GMT)

வாழ்வில் இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதி சாவிலும் இணைபிரியாததை அறிந்த அந்தப்பகுதி பொதுமக்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் செக்குமேடு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 85), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ராஜம்மாள் (75). கணவன்- மனைவி இருவரும் இணைபிரியா தம்பதியாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கட்டிட மேஸ்திரி முத்து நேற்று முன்தினம் வீட்டில் சாப்பிட்ட பின்னர் தூங்க சென்றார். அவர் தூக்கத்திலேயே இறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜம்மாள் அழுதபடியே இருந்துள்ளார். நேற்று காலை கணவர் உடல் அருகே இருந்து கதறி அழுதபோது திடீரென, கணவர் உடல்மீது மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் தூக்கியபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

வாழ்வில் இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதி சாவிலும் இணைபிரியாததை அறிந்த அந்தப்பகுதி பொதுமக்கள் சென்று அஞ்சலி செலுத்தினர். அதனைதொடர்ந்து நேற்று மாலை கட்டிட மேஸ்திரி முத்து, அவரது மனைவி ராஜம்மாள் ஆகியோர் உடல்களை ஒரே வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து சென்று, பேரணாம்பட்டு ஆயக்கார வீதியிலுள்ள சுடுகாட்டில் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த தம்பதியினர்க்கு உமாபதி என்கிற ஒரு மகன் உள்ளார்.


Next Story