நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பது ஏன்? முதல் அமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்


நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பது ஏன்? முதல் அமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்
x
தினத்தந்தி 27 July 2024 2:03 AM GMT (Updated: 27 July 2024 3:38 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை பல்வேறு மாநில மக்கள் புறக்கணித்தனர் என்று முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கூறினார்.

சென்னை

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு முன்பே தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க போவது இல்லை என்று அறிவித்தார்.

நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், கூட்டத்தை புறக்கணிப்பது ஏன் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ வாயிலாக விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- இந்நேரம் டெல்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான் , பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.

ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை – நான் அடிக்கடி சொல்லிக்கொண்டு வருகின்றேன். ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல – வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும்! இப்படித்தான் தமிழ்நாடு அரசு பணியாற்றிக் கொண்டு இருக்கிறது! ஏன், மோடி தலைமையிலான பாஜக. அரசு வருவதற்கு முன்பு இருந்த எல்லா மத்திய அரசுகளும்கூட அப்படித்தான் இருந்தன. ஆனால், இந்தப் பெருந்தன்மை பாஜக. அரசிடம் இல்லை! இவர்கள் மட்டும்தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துகிறார்கள்.

அதற்கு அடையாளம்தான், கடந்த 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்! நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட பாஜக.வைப் பல்வேறு மாநில மக்களும் புறக்கணித்தார்கள்! அப்படி புறக்கணித்த மாநிலங்களை – அந்த மாநில மக்களைப் பழிவாங்குகிற பட்ஜெட்டாகத்தான், நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அமைந்துள்ளது! ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை – 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்த மக்களைப் பழிவாங்க உருவாக்கி இருக்கிறார். இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்பால், அவர் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கே முரணானது!

பாஜக அரசானது, தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டைப் புறக்கணித்துக் கொண்டு வருகிறது! தமிழ்நாட்டுக்கு என்று அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டம் என்றால், அது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைதான்! ஆனால் அதுவும் பத்தாண்டுகள் ஆகியும் என்ன நிலைமையில் இருக்கிறதென உங்களுக்கே நன்றாகத் தெரியும்! தமிழ்நாட்டுக்கென எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொடுக்காமல், தமிழ்நாட்டு மக்கள் பாஜக.வுக்கு வாக்களிக்க வேண்டும் என எப்படித்தான் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை!

பட்ஜெட்டுக்கு இரண்டு நாளுக்கு முன்பு கூட, நமது தமிழ்நாட்டுக்கான தேவைகள் என்னவென்று, சமூக ஊடகங்கள் மூலமாகவே ஒன்றிய ஆட்சியாளர்களுக்குத் தெரியப்படுத்தினேன். ஆனால், அதில் இருந்து ஒன்றைக்கூட நிதி அமைச்சர் அறிவிக்கவில்லை! அவ்வளவு ஏன்? 'தமிழ்நாடு' என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை! இவ்வளவு ஆண்டுகளாகச் சும்மா ஒப்புக்காகவாவது ஒரு திருக்குறளைச் சொல்லி, பட்ஜெட் வாசிப்பார்கள்… இந்த முறை திருவள்ளுவரும் கசந்துவிட்டார் போல… இப்படிப்பட்ட பட்ஜெட்டில், திருக்குறள் இடம்பெறாதது ஒருவகையில் நிம்மதிதான்!

ஒட்டுமொத்தமாகச் சொல்லவேண்டும் என்றால், தமிழ்நாட்டுக்குப் புதிய திட்டங்களைத் அறிவிக்கவில்லை என்பதோடு - ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டங்களுக்கான நிதியையும் குறைக்கும் வஞ்சக முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது இந்த ஒன்றிய அரசு.

அடுத்து, பட்ஜெட் உரையில் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்கள்… மாநிலங்களால் விதிக்கப்படும் முத்திரைத் தாள் கட்டணத்தைக் குறைப்போம் என மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமலேயே பட்ஜெட்டில் அறிவிக்கிறார், நிதி அமைச்சர். ஏற்கெனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்து, மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையை எடுத்துக்கொண்டார்கள். நான் கேட்பது என்னவென்றால், ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பைச் சரிக்கட்டுவதற்கான 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டையே இன்னும் அளிக்காத இந்த ஒன்றிய அரசுக்கு, மாநிலங்களின் வரிவிதிப்பு முறையை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது?

கடந்த பத்தாண்டுகளாக வருமானச் வரிச்சலுகை இன்றித் தவித்துக்கொண்டு இருக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கு, வெறும் 17 ஆயிரத்து 500 ரூபாய் சலுகையை மட்டும் வழங்கி, அந்தச் சலுகையும் பெரும்பான்மையோருக்குக் கிடைக்காமல் செய்துகொண்டு, பெரும் வரிச்சலுகை கொடுத்ததாக மார்தட்டிக் கொள்கிறது இந்த மத்திய அரசு.

இது தமிழ்நாட்டைப் பழிவாங்கும் பட்ஜெட் மட்டுமல்ல – ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட்! சுயநலத்துக்காக - நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளப் போட்டுக்கொண்ட பட்ஜெட் இது! ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டு மக்களின் குரலாக – ஏன், இந்திய நாட்டு மக்களின் குரலாக ஒன்று சொல்கிறேன்… மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள்! மேலும் மேலும் தோல்விகளைச் சந்திப்பீர்கள்! இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கொந்தளிப்பதுபோல, இந்திய மக்களின் மனங்களும் கொந்தளிப்பில் இருக்கிறது! இதற்கு பாஜக பதில் சொல்லியே தீர வேண்டும்! இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story