மின்சாரம் பாய்ந்து வெல்டர் பலி: உறவினர்கள் சாலை மறியல்


சின்னதாராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து வெல்டர் பலியானார். இவரது குடும்பத்தினருக்கு நஷ்டஈடு கேட்டு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கரூர்

வெல்டர் பலி

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள பனையம்பாளையம்- சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கார்த்திகேயன் (வயது 30). இவர் சின்னதாராபுரம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரில் உள்ள ஒரு லேத் பட்டறையில் வெல்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் கார்த்திகேயன் லேத் பட்டறையில் வேலை பார்தது கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கார்த்திக்கேயனை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று காலை அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

உறவினர்கள் மறியல்

இந்தநிலையில் நேற்று காலை கார்த்திகேயனின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு கேட்டு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சின்னதாராபுரம் போலீஸ் நிலையம் முன்பு உள்ள கரூர்-தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story