களை கட்டிய ஆடுகள் விற்பனை


களை கட்டிய ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 13 Oct 2022 6:45 PM GMT (Updated: 13 Oct 2022 6:46 PM GMT)

அய்யலூர் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது.

திண்டுக்கல்

அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சந்தையாக இந்த ஆட்டுச்சந்தை திகழ்கிறது. திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்து ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக வாங்கி செல்கின்றனர். புரட்டாசி மாதம் பிறந்ததில் இருந்து, கடந்த ஒரு மாதமாக அய்யலூர் ஆட்டுச் சந்தையில் விற்பனை மந்தமாகவே இருந்தது. இந்த நிலையில் அடுத்த வாரம் புரட்டாசி மாதம் முடிவடைகிறது. இதனால் நேற்று நடந்த அய்யலூர் ஆட்டுச்சந்தையில் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகள் சந்தையில் குவிந்தனர்.


நேற்று ஒரு கிலோ எடை கொண்ட நாட்டுக்கோழி ரூ.350 முதல் ரூ.400 வரையிலும், 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.8 ஆயிரம் வரையிலும், செம்மறி ஆடு ரூ.7 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து வியாபாரிகள் கூறியபோது, புரட்டாசி மாதம் முடிவடைய உள்ளது. மேலும் தீபாவளி பண்டிகை வர இருப்பதால், சந்தையில் ஆடு மற்றும் கோழிகளின் விற்பனை களை கட்டியது என்றனர்.






Next Story