நாடாளுமன்ற தேர்தலில் தமிழரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுவோம் - நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் சீமான் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் தமிழரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுவோம் - நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் சீமான் பேச்சு
x
தினத்தந்தி 14 Jun 2023 6:45 PM GMT (Updated: 14 Jun 2023 6:46 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் தமிழரை வேட்பாளராக நிறுத்தினால் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுவோம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாடாளுமன்ற தேர்தலில் தமிழரை வேட்பாளராக நிறுத்தினால் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுவோம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

பொதுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சி சார்பில் மண்வளமே மக்கள் நலம் என்ற தலைப்பில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசினார். அப்போது கூறியதாவது:-

உலகத்தில் எவன் உயர்ந்த மனிதன் என்றால் வீழ்ந்து கிடப்பவனை குனிந்து எவன் கைதூக்கி விடுகிறானோ அவன் தான் உயர்ந்த மனிதன். இந்த தத்துவம் உருவாவதற்கு முன்பே இந்த மண்ணில் பிறந்த புரட்சியாளர் வைகுண்டர், 'தாழக்கிடப்பவரை தற்காப்பதே தர்மம்' எனக்கூறி விட்டார். மார்சல் நேசமணி இந்த மண்ணை மீட்க போராடினார். அவருடைய பேரன், பேத்திகள் இந்த மண்ணை காக்க போராடிக் கொண்டிருக்கிறோம்.

மதம், சாதி, சாமி பற்றி பேச அரசியல் கட்சிகள் உள்ளன. மனிதம் பற்றி பேச நாம் மட்டுமே உள்ளோம்.

33 விழுக்காடு காடு

ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 33 விழுக்காடு காடு இருக்க வேண்டும். மரம் வளர்க்கலாம், நீர்த்தேக்கம் உருவாக்கலாம். ஆனால் மலையை அழித்தால் எப்படி உருவாக்க முடியும். மலை வளம்தான் மழை வளம். மேற்குத்தொடர்ச்சி மலை இல்லாமல் இருந்தால் மழை எப்படி பொழியும். ஏறக்குறைய மலைகளை முடித்து விட்டார்கள்.

கேரளாவில் மலை இருக்கிறது. அந்த மலைகளை நொறுக்கி ஏன் கற்களை எடுக்கவில்லை. அவர்கள் மண்ணை நேசிக்கிறார்கள். ஆனால் இங்கிருப்பவர்கள் மலை, நீர், காற்று நாசமானால் பரவாயில்லை பணம் போதும் என நினைக்கிறார்கள்.

தமிழ் வேட்பாளர்

காற்றாலை மூலம், சூரிய ஒளி மூலம், கடல் அலை மூலம் மின்சாரம் தயாரிக்கலாம். இதையெல்லாம் யார் தயாரிக்கிறார்கள். காற்றாலை தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி மின்சாரத்தை அதானிக்கு கொடுத்துள்ளனர். நாட்டை நாசமாக்கும் அணு உலை, அனல் மின் உற்பத்தியை அரசு கையில் வைத்துள்ளது. கல்வி, உயிர்காக்கும் மருத்துவம், தண்ணீர் ஆகியவற்றை தனியார் விற்கிறது.

ஆனால் சாராயத்தை அரசு விற்கிறது. சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பதால் நிறைய பேர் சாராயம் குடிக்கிறார்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வந்த பிறகு நிறைய கள்ளச்சாராயம் வந்துவிட்டது. செந்தில் பாலாஜியால் நாட்டு மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக இயல்பு நிலையில் இல்லை. செந்தில் பாலாஜிக்கு உடல் நலம் சரியில்லை என்பதால் ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். பிறகு எதற்காக காவேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கணும் எனக் கேட்கிறார்கள். செந்தில் பாலாஜி அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடந்த ஊழலுக்கு இப்போது சோதனை நடத்துகிறார்களாம். ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழலுக்கு இப்போது சோதனைக்கு சென்று உள்ளனர். இவ்வளவு நாட்கள் என்ன செய்தீர்கள்.

தமிழர் ஒருவர் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். அப்படி எனில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழரை வேட்பாளராக நிறுத்துங்கள் (பா.ஜ.க.வுக்கு)நாங்கள் ஓட்டு போடுகிறோம்.

காங்கிரஸ்-பா.ஜனதா

காங்கிரசும், பா.ஜனதாவும் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதற்காக வேண்டும் என்று ஒரு காரணம் சொல்லுங்கள் நான் கட்சியை கலைத்து விட்டு காங்கிரசில் அல்லது பா.ஜனதாவில் சேர்ந்துவிடுகிறேன். காங்கிரஸ் இனத்தின் எதிரி. பா.ஜனதா மனித குலத்தின் எதிரி. கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டும். இப்போது கொடுக்கும் இலவச கல்வி தரம் இல்லை. குமரிைய சேர்ந்த அமைச்சரின் மகன் அரசு கல்லூரியில் படிப்பாரா?

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுக்கூட்டத்தில் குமரி மண்டல ஒருங்கிணைப்பாளர் பெல்வின் ஜோ, நாகர்கோவில் சட்டசபை தொகுதி செயலாளர் விஜயராகவன், கிழக்கு மாநகர் செயலாளர் சுந்தரேஸ்வரன், நாகர்கோவில் மகளிர் பாசறை செயலாளர் அமலா, நாகர்கோவில் சட்டசபை தொகுதி மகளிர் பாசறை துணை செயலாளர் மெஜிலன்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story