தவிட்டுப்பாளையத்தில் 62 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.


தவிட்டுப்பாளையத்தில் 62 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
x

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தவிட்டுப்பாளையத்தில் 62 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

கரூர்

வெள்ளப்பெருக்கு

கர்நாடகாவில் காவிரியாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ண சாகர், கபினி அணைகள் நிரம்பி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் வெள்ள நீர் மேட்டூர் அணைக்கு வருவதன் காரணமாக நேற்று முன்தினம் மேட்டூர் அணையில் இருந்து சுமார் 2 லட்சம் கனஅடிக்கு மேல் வெள்ள நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, புங்கோடை, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, நத்தமேடு, தவுட்டுப்பாளையம், நஞ்சை புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கக் கூடிய பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.

தண்ணீர் புகுந்தது

இந்நிலையில் தவிட்டுப்பாளையம் காவிரி கரையோரம் குடியிருந்த 62 வீடுகளுக்குள் காவிரி ஆற்று வெள்ளநீர் புகுந்தது. தொடர்ந்து வெள்ளை நீரின் அளவு அதிகரித்து வந்ததன் காரணமாக அங்குள்ள மாரியம்மன் கோவில் வரை வெள்ளநீர் வந்து சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் குடியிருப்பு வீடுகளுக்கு செல்லும் வகையில் போடப்பட்டிருந்த காங்கிரீட் சாலைகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால் காவிரி ஆற்று வெள்ள நீரில் வரும் பாம்பு மற்றும் பல்வேறு வகையான விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு வசூல் அச்சத்துடன் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் காவிரி ஆட்டம் வெள்ளநீர் புகுந்த 62 குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 165 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.

கண்காணிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த புகளூர் தாசில்தார் மோகன்ராஜ், மண்டல துணை தாசில்தார் அன்பழகன் மற்றும் வருவாய் துறையினர் தவிட்டுப்பாளையம் பகுதிக்கு விரைந்து வந்து வெள்ளம் புகுந்த வீடுகளை பார்வையிட்டு வீட்டுக்குள் இருந்த கட்டில்கள் துணிமணிகள் உணவு பொருட்கள் பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் எடுத்து பாதுகாப்பான இடத்தில் வைக்க ஏற்பாடு செய்தனர்.

பாதிக்கப்பட்ட 165 நபர்களை தவிட்டுப்பாளையத்தில் உள்ள ஊராட்சி சேவை மையம் மற்றும் அரசு நடுநிலைப் பள்ளியில் தங்க வைத்தனர். பின்னர் உடனடியாக உணவுகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு காலை, மாலை, இரவு என மூன்று வேலையும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.


Next Story