கிராம மக்கள் சாலை மறியல்


கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Sep 2023 6:45 PM GMT (Updated: 10 Sep 2023 6:45 PM GMT)

சேத்தியாத்தோப்பு அருகே வேகத்தடை அமைக்கக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர்

சேத்தியாத்தோப்பு

சாலை மறியல்

சென்னை-கும்பகோணம் சிதம்பரம் பிரதான சாலையில் உள்ள பின்னலூர் கிராமத்தில் கிராம மக்கள் ஒன்று திரண்டு வேகத்தடை அமைக்கக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையின் குறுக்கே மரக்கட்டை மற்றும் குச்சிகளை போட்டு கோஷம் எழுப்பினர்.

இது பற்றிய தகவல் அறிந்து சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது அவர்கள் சிவன் கோவில் மற்றும் பஸ் நிறுத்தம் ஆகிய 2 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது சாலை அமைக்கப்பட்ட பின்பு அந்த இடத்தில் வேகத்தடை அமைக்காததால் தொடர் விபத்து நடக்கிறது. எனவே வேகத்தடை அமைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story