ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்


ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
x
தினத்தந்தி 7 Aug 2023 9:00 PM GMT (Updated: 7 Aug 2023 9:00 PM GMT)

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

நீலகிரி

கூடலூர்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கிராம மக்கள் முற்றுகை

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட முல்லை நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாலை, தெருவிளக்கு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வாகனங்களில் சென்று வர முடியாத நிலை உள்ளது. மேலும் நோயாளிகள், கர்ப்பிணிகளை அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்வது சவாலாக உள்ளது.

இதனால் அடிப்படை வசதிகள் இன்றி கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் அடிப்படை வசதிகள் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை முல்லை நகர் கிராம மக்கள் நேற்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அடிப்படை வசதிகள்

இதுகுறித்து தகவல் அறிந்த நியூகோப் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் முல்லை நகரில் கடந்த பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை. கிராமத்துக்கு ஒதுக்கப்படும் நிதி வேறு பகுதிக்கு மாற்றப்பட்டு, வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும், அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என அறிவிக்கிறோம். உடனே அடிப்படை வசதிகள் செய்து தருவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால், அதன் பின்னர் எந்த பணியும் செய்து தருவதில்லை என்றனர். பின்னர் அவர்கள் பேரூராட்சி தலைவர் சித்ராதேவியிடம் மனு வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story