சிதம்பரம் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


சிதம்பரம் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x

இலவச மனைப்பட்டா கேட்டு சிதம்பரம் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கடலூர்

சிதம்பரம்,

சிலருக்கு மட்டுமே மனைப்பட்டா

சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சி பாலுத்தாங்கரையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறையினரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே மனைப்பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது.

இது பற்றி அறிந்த கிராம மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லப்பன், சமூகஆர்வலர் முனீசங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடனம், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் திரண்டு வந்து சிதம்பரம்-புவனகிரி மெயின் ரோட்டில் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

முற்றுகை-தர்ணா

இதுபற்றி அறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அனைவரும் சிதம்பரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மனைப்பட்டா வழங்கக்கோரி கோஷமிட்டனர்.

அவர்களிடம் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் கோரிக்கை குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்த அவா்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story