விக்கிரவாண்டி-தஞ்சாவூர் 4 வழிச்சாலையில் திக்... திக்.... பயணம்


விக்கிரவாண்டி-தஞ்சாவூர் 4 வழிச்சாலையில் திக்... திக்.... பயணம்
x
தினத்தந்தி 3 Nov 2022 6:45 PM GMT (Updated: 3 Nov 2022 6:45 PM GMT)

மண் அரிப்பால் மலட்டாறு பாலம் சேதமடைந்துள்ளது. விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையே கிடப்பில் போடப்பட்ட 4 வழிச்சாலை பணிகளால் சாலைகள் படுமோசமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் திக்... திக்.... பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பண்ருட்டி, நெய்வேலி ஆர்ச்கேட், வடலூர், சேத்தியாத்தோப்பு, கும்பகோணம் வழியே செல்கிறது. போக்குவரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 165 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 4 வழிச்சாலையாக கடந்த 2006-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து 2010-ம் ஆண்டில் அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையேயுள்ள சாலையையும், வழியில் உள்ள பாலங்களையும் புதிதாக அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாலும், நேரம் வீணாகுவதை கருத்தில் கொண்டும் விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையிலும் மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3,517 கோடி ஒதுக்கீடு செய்தது.

3 பிரிவுகளாக பணிகள்

இதையடுத்து விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரை 4 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் 3 பிரிவுகளாக பிரித்து பணிகள் தொடங்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் விக்கிரவாண்டி- சேத்தியாத்தோப்பு வரை ஒரு பிரிவாகவும், சேத்தியாத்தோப்பில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரை 2-வது பிரிவாகவும், சோழபுரத்தில் இருந்து தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் புறவழிச்சாலை வரை 3-வது பிரிவாகவும் பணிகள் ஒதுக்கப்பட்டன.

விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையே 4 வழிச்சாலை அமையும் இடங்கள் வழியாக வெள்ளியனூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சேத்தியாத்தோப்பு, அணைக்கரை, திருப்பனந்தாள், கும்பகோணம், பாபநாசம் ஆகிய முக்கிய இடங்கள் உள்ளன. இந்த பகுதிகள் வழியாக ஆறுகள் செல்லும் 102 இடங்களிலும், சாலை பகுதிகளில் 70 இடங்களிலும் பாலங்கள் அமைகின்றன. இதுதவிர 5 இடங்களில் ரெயில்வே மேம்பாலங்களும், 2 இடங்களில் புறவழிச்சாலைகளும், 3 இடங்களில் சுங்கச்சாவடிகளும் அமைக்கப்படுகின்றன. இந்த சாலை பணிகள் 2020-ம் ஆண்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

கிடப்பில்...

ஆனால் இப்பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. சாலையின் இருபுறங்களில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் பெரிய அளவில் சிக்கல்கள் எழவில்லை என்றாலும் சாலை அமைப்பதற்கான பணிகள் மந்தகதியிலேயே நடந்து வருகிறது. தற்போது மேம்பாலங்கள், பாலங்கள், கால்வாய் பணிகள் நடைபெற்று வந்தாலும் கருங்கல் ஜல்லி, கான்கிரீட் கலவையை கொட்டி சமன் செய்தல், தார் சாலை அமைத்தல், சாலையின் நடுவே தடுப்பு அமைத்தல் ஆகிய பணிகள் ஒரு சில இடங்களில் மட்டுமே நடந்துள்ளது.

குறிப்பாக விக்கிரவாண்டியில் இருந்து கோலியனூர் வரை சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு உள்ள பகுதிகளில் சாலை பணிகள் முழுமை பெறவில்லை. கோலியனூரில் இருந்து கடலூர் மாவட்டம் ராசாப்பாளையம் வரை ஒரு சில இடங்களில் மட்டும் பாலம் கட்டும் பணிகள் முடிவுற்ற நிலையில் சாலை பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பிலேயே கிடக்கிறது.

திக்... திக்.... பயணம்

இதனால் சாலைகள் மேடும், பள்ளமுமாக காட்சியளிக்கிறது. இதில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அதோடு மின்விளக்கு வசதி இல்லாமல் இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் இருக்கும் பள்ளம், மேடு தெரியாமல் தினசரி சாலை விபத்துகளும் நடந்து வருகிறது. வாகன ஓட்டிகள் பலர், இந்த சாலையில் சற்று அதிவேகமாக வந்து நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். இவ்வாறு போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக இருக்கும் இந்த சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் தினம், தினம் திக்... திக்... பயணம் செய்து வருகின்றனர்.

தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அந்த சாலைகள் மேலும் படுமோசமாகியுள்ளது. குறிப்பாக ராமையன்பாளையம், சுந்தரிப்பாளையம், வாணியம்பாளையம், சின்னக்கள்ளிப்பட்டு, கண்டரக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது.

திடீர் பள்ளம்

இதனிடையே தொடர் மழையினால் தென்பெண்ணையாறு மற்றும் அதன் கிளை ஆறுகளான மலட்டாறு, பம்பை ஆறு, நரியாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விழுப்புரம் அருகே ஏ.கே.குச்சிப்பாளையம் பகுதியை கடந்து செல்லக்கூடிய மலட்டாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளப்பெருக்கினால் ஆற்றுப்பாலத்தின் மேல்பகுதியில் சாலையோரமாக நேற்று மண் அரிப்பு ஏற்பட்டு திடீரென பள்ளம் உருவாகியுள்ளது.

இதனால் அவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் அச்சப்பட்டு வருகின்றனர். அங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொள்ளாததால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். அப்பகுதியில் தெருமின் விளக்கு வசதியும் கிடையாது என்பதால் இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள், பள்ளத்தில் விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

இதேபோன்று வடலூர், சேத்தியாத்தோப்பு வரை சாலைப்பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பல இடங்களில் சாலைகள் படுமோசமாக காட்சியளிக்கின்றன. அனைத்து இடங்களிலும் ஆறுகள், வாய்க்கால்கள் செல்லக்கூடிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் நிலைமையும் இப்படித்தான் இருக்கின்றது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து இடங்களையும் முறையாக ஆய்வு செய்து விபத்துகளை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story