வேளாங்கண்ணி திருவிழா: பொதுமக்கள் கடலில் குளிக்க தடை - கலெக்டர் உத்தரவு


வேளாங்கண்ணி திருவிழா: பொதுமக்கள் கடலில் குளிக்க தடை - கலெக்டர் உத்தரவு
x

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவையொட்டி பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதித்து கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.

நாகப்பட்டினம்

நாகை,

நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெருவிழா நடைபெறும் அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், திருவிழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, கோட்டாட்சியர் முருகேசன், பேரூராட்சி தலைவர் சர்மிளா டயானா, பேரூராட்சி செயலாளர் பொன்னுசாமி மற்றும் வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் நிருபர்களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகப் புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா இம்மாதம் 29 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் அங்கு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை விரிவாக செய்திட வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

வேளாங்கண்ணி திருவிழாவிற்கு வரும் பக்தர்களிடம் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது, அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருவிழா நாட்களில் வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும், உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்த்திடும் பொருட்டு கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story