குண்டும், குழியுமான சாலையால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்


குண்டும், குழியுமான சாலையால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
x
தினத்தந்தி 23 July 2023 8:30 PM GMT (Updated: 23 July 2023 8:30 PM GMT)

கொண்டம்பட்டி-அரசம்பாளையம் இடையே குண்டும், குழியுமான சாலையால் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. இதை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கொண்டம்பட்டி-அரசம்பாளையம் இடையே குண்டும், குழியுமான சாலையால் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. இதை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பழுதடைந்த சாலை

கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டியில் இருந்து அரசம்பாளையம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கொண்டம்பட்டி முதல் அரசம்பாளையம் செல்லும் வரை 5-க்கும் மேற்பட்ட இடங்களில் தார்சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை அரசம்பாளையம், காரச்சேரி, சொலவம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது மட்டுமின்றி மழை பெய்யும்போது அந்த சாலையில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கரவ வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்லும் பொதுமக்கள் தவறி விழுந்து வருகின்றனர்.

விபத்து அபாயம்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, அரசம்பாளையம்-கொண்டம்பட்டி சாலை பல இடங்களில் பெயர்ந்து, மண் சாலை போலவே மாறிவிட்டது. இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும், பழுதடைந்த அந்த சாலையை சீரமைக்கவில்லை.

தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது. இரவு நேரங்களில் அந்த சாலையில் தெருவிளக்குகளும் இல்லை. இதனால் குழிகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது என்றனர்.

பணி தொடங்கும்

மேலும் கிணத்துக்கடவு ஒன்றிய அதிகாரிகள் கூறும்போது, கொண்டம்பட்டியில் இருந்து அரசம்பாளையம் செல்லும் சாலையை கிழக்கு புறவழிச்சாலை பணிக்காக மாநில நெடுஞ்சாலை துறை கையகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் மாநில நெடுஞ்சாலைத்துறை மீண்டும் ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்படைக்க உள்ளது. சாலையை ஒப்படைத்ததும் அரசுக்கு தகவல் தெரிவித்து சீரமைக்கும் பணி தொடங்கும் என்றனர்.


Related Tags :
Next Story