வைத்தியநாத சுவாமி கோவில் நந்தியெம்பெருமாள் திருக்கல்யாணம்


வைத்தியநாத சுவாமி கோவில் நந்தியெம்பெருமாள் திருக்கல்யாணம்
x

திருமழபாடி சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் நந்தியெம்பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அரியலூர்

பல்லக்கில் பெண் அழைப்பு

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தை சேர்ந்த திருமழபாடி கிராமத்தில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் சிவாலயங்களில் மிகவும் பழமையானது, காசிக்கு நிகராக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாயும் கொள்ளிடம் ஆற்றின் அருகே அமையப்பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடப்பெற்றும், வசிஷ்டர், அகஸ்தியர் ஆகிய முனிவர்களால் பூஜிக்க பெற்றதுமாகும். இக்கோவிலில் நந்தியெம்பெருமாள் திருக்கல்யாண விழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். `நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்' நடைபெறும் என்ற ஐதீகத்தின்படி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இத்திருக்கல்யாணத்தை காண ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். அதன்படி இந்த ஆண்டிற்கான நந்தியெம்பெருமாள் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி திருவையாறு அய்யாரப்பர் கோவிலில் இருந்து வசிஷ்ட முனிவரின் புதல்வி சுயசாம்பிகை தேவியார் பல்லக்கில் பெண் அழைப்பாக கொண்டுவரப்பட்டார்.

திருக்கல்யாணம்

பின்னர் சுந்தராம்பிகை மற்றும் வைத்தியநாத சுவாமிகள் ஒரு பல்லக்கிலும், நந்தியெம்பெருமாள் மற்றும் சுயசாம்பிகை மற்றொரு பல்லக்கிலும் கோவிலை சுற்றி ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வலம்வந்து மக்களுக்கு அருள்பாலித்து கோவிலின் முன்பு இருந்த திருமண மேடைக்கு வந்தடைந்தார்கள். இதனையடுத்து, அங்கு சுயசாம்பிகை தேவியாருக்கும், நந்தியெம்பெருமாளுக்கும் எண்ணெய், மஞ்சள், சந்தனம், விபூதி, இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு மணமக்களாக அலங்கரித்தனர். பின்னர் வேத வித்வான்கள் யாக பூஜையுடன் வேத மந்திரங்கள் ஓத நாதஸ்வர இன்னிசையுடன் தருமபுரம் ஆதீனம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மணமகள் சுயசாம்பிகை தேவியார் கழுத்தில் மணமகன் நந்தியெம்பெருமாள் தாலி கட்ட, பக்தர்கள் அட்சதை தூவ திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் மணமக்களுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு ஊஞ்சலில் அமர்த்தப்பட்டனர்.

மாவிளக்கு போட்டு வழிபாடு

அங்கு ஊஞ்சலில் ஆடியபடியே சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதனைத்தொடர்ந்து சுயசாம்பிகை மற்றும் நந்தியெம்பெருமாள் கண்ணாடி பல்லக்கில் ஏற்றப்பட்டு திருமண கோலத்தில் கோவிலைச் சுற்றி ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டனர். அப்போது வீடுதோறும் பக்தர்கள் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தனர். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்குளிர தரிசனம் செய்தனர். இவ்விழாவில் அசம்பாவித சம்பவங்கள், திருட்டு உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர்கணேஷ், இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story