உத்திரிய மாதா தேர்பவனி


உத்திரிய மாதா தேர்பவனி
x

வேளாங்கண்ணியில் உத்திரிய மாதா தேர்பவனி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணியில் உத்திரிய மாதா தேர்பவனி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

உத்திரிய மாதா

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் உத்திரியமாதா ஆலயம் உள்ளது.

இந்த உத்திரியமாதா ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 10 நாட்கள் நடைபெறும்.

இந்த விழாவில் மராட்டியத்தை சேர்ந்த வசாய் எனப்படும் கிறிஸ்தவ மீனவர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்வார்கள். இந்த ஆண்டு விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேர்பவனி

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. முன்னதாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் மிக்கேல் ஆண்டவர், செபஸ்தியார், மாதா சொரூபம் வைக்கப்பட்டது.

தேர்களை பங்குத்தந்தை அற்புதராஜ் புனிதம் செய்து தொடங்கி வைத்தார். முதலில் மிக்கேல் ஆண்டவர் தேரும், இதை தொடர்ந்து செபஸ்தியார், மாதா தேர்களும் சென்றன.

வாணவேடிக்கை

தேர்பவனி வேளாங்கண்ணி மாதா பேராலய முகப்பில் இருந்து தொடங்கி கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை அடைந்தது. இதை தொடர்ந்து வாண வேடிக்கை நடந்தது.

இதில் பேராலய அதிபர் இருதயராஜ், உதவிபங்கு தந்தையர்கள் டேவிட்தனராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் அருள் சகோதரர்கள், சகோதரிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

திருப்பலி

இதை தொடர்ந்து புனித உத்திரிய மாதா ஆலயத்தில் நேற்று காலை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் கொங்கனி மொழியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு நற்கருணை ஆசிர் நடைபெற்றது. மாலையில் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.


Next Story