பெருமாநல்லூர் அருகே குளிக்க சென்ற சிறுமி, பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு...!


பெருமாநல்லூர் அருகே குளிக்க சென்ற சிறுமி, பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு...!
x

பெருமாநல்லூர் அருகே குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி சிறுமி மற்றும் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம்,பெருமாநல்லூர் அருகே நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி உமா (வயது 28). அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன்.அவரது மகள் காவியா (15) 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகே வசிக்கும் 5 க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள் உள்ளிட்டோர் நெருப்பெரிச்சல் அருகே உள்ள நாதம்பாளையம் பாறைகுழியில் குளிப்பதற்காக இன்று காலை சென்றுள்ளனர்.

அப்போது குளிப்பதற்காக பாறைகுழியில் இறங்கிய உமா மற்றும் காவ்யா இருவரும் எதிர்பாராத விதமாக கால் தடுக்கி நீரில் மூழ்கியுள்ளனர். அப்போது அருகிலிருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தனர். மேலும், பெருமாநல்லூர் போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உமா, காவ்யா ஆகியோரை உயிரிழந்த நிலையில் ஒரு மணி நேர தேடலுக்கு பின் மீட்டனர். உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story