தூத்துக்குடியில்தெற்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


தூத்துக்குடியில்தெற்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2023 6:45 PM GMT (Updated: 5 Jan 2023 6:45 PM GMT)

தூத்துக்குடியில்தெற்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடந்த தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் பணியாற்றும் வழிமுறைகள் மற்றும் பூத்கமிட்டி அமைப்பது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. கட்டுக்கோப்பாக இருந்து வருகிறது. இதனை யாராலும் அசைக்க முடியாது. வரும் பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த வெற்றியை எடப்பாடி பழனிச்சாமிக்கு பரிசாக அளிக்க வேண்டும். இதற்கேற்ப ஒவ்வொரு பூத்திற்கும் கட்சிக்கு உண்மையான விசுவாசிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று பேசினார்.

ஆர்.பி.உதயகுமார்

கூட்டத்தில் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில ஜெ.பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாக்குச்சாவடி பணியாளர்கள் செயல்படும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் எடப்பாடிபழனிசாமி சிறப்பான ஆட்சி நடத்தினார். ஜெயலலிதா பிறந்தநாள் அன்று ஏழை-எளிய மணமக்களுக்கு இலவச திருமணங்கள் நடத்தப்பட்டு வந்தது.

கடந்த 2 ஆண்டுகால கொரோனாவால் இந்த திருமண நிகழ்வு நடத்தப்படவில்லை. இந்தாண்டு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடிபழனி்சாமி தலைமையில் வரும் பிப்.23-ந் தேதி மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் எனது மகள் உட்பட மொத்தம் 51ஜோடிகளுக்கு இலவச திருமண விழா நடைபெறுகிறது. கடந்த காலங்களில் தமிழகத்தை தலைநிமிர வைத்த அ.தி.மு.க. வரும் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது நிச்சயமாகும் என்றார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர்,

முன்னாள் நகர் மன்ற தலைவர் ஹென்றி தாமஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story