காரை திருடி சென்றவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சிகடலூரில் பரபரப்பு


காரை திருடி சென்றவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சிகடலூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Aug 2023 6:45 PM GMT (Updated: 7 Aug 2023 6:46 PM GMT)

காரை திருடி சென்றவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர்


கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று காலை 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வந்தார். பின்னர் அவர் தான் ஒரு கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி, தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை பார்த்த அங்கிருந்த போலீசார், மூதாட்டியை தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

கார் திருட்டு

விசாரணையில் அவர், கடலூர் வன்னியர்பாளையம் ரத்தினவேல் நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி கவுசல்யா (70) என்பதும், இறந்து போன இவரது மகனுக்கு சொந்தமான காரை பாதிரிக்குப்பத்தை சேர்ந்த ஒருவர் திருடிச்சென்று விட்டதாகவும், அவர் மீது போலீசில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், இதுதொடர்பாக கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, மூதாட்டியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story