தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி


தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
x

தமிழின படுகொலை நினைவுநாளையொட்டி தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவுநாளையொட்டி தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

இலங்கையில் நடந்த ஈழப்போரின்போது கடந்த 2009-ம் ஆண்டு மே 17, 18, 19 ஆகிய 3 நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சுமார் 1½ லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இவர்களின் நினைவாக தஞ்சை விளார் சாலையில் உலக தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டுள்ளது.

இந்த முற்றத்தில் இலங்கை முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலையை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் நினைவு தினம் அனுசரிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு தமிழின படுகொலை நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஈழப்போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பேட்டி

பின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறும்போது, ஈழத்தமிழர் பிரச்சினை என்பதை கடந்து இந்தியாவின் பாதுகாப்பு பிரச்சினையாக உருவாகி உள்ளது. ஏனென்றால் இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றி இருக்கிறது. இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்காக தான் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் அமைத்த குவாட் கூட்டணியில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இந்திய பிரதமர் மோடி இந்த குவாட் மூலம் இலங்கை இன பிரச்சினையில் தலையிட்டு இந்தியாவின் பாதுகாப்புக்கு வந்திருக்கக்கூடிய அபாயத்தை தடுப்பதுடன், ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். ஈழத்தமிழர் பிரச்சினை, காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை, இந்தி திணிப்பு போன்ற பிரச்சினை என எந்த பிரச்சினையாக இருந்தாலும், நமது மொழிக்கோ, இனத்துக்கோ ஊறு விளைவிக்கக்கூடிய பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் கட்சி வேறுபாடு இல்லாமல், தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் உலகத்தமிழர் பேரமைப்பின் பொதுச்செயலாளர் முத்துமணி, இலங்கை முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story