திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்


தினத்தந்தி 25 April 2023 6:45 PM GMT (Updated: 25 April 2023 6:46 PM GMT)

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம்

தொண்டி

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது.

கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதும், ராணி மதுராந்தகி நாச்சியார் நிர்வாகத்தின் கீழ் உள்ளதுமான பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி சுவாமி அம்பாள் பரிவார தெய்வங்களுடன் கொடி மரத்தின் அருகில் எழுந்தருளினர்.

இதைதொடர்ந்து நந்தீஸ்வரர் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான சரக அலுவலர் செந்தில்குமார், ஆலய கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன், மேல் பனையூர் சுந்தரேஸ்வரர் கோவில் அறங்காவலர் சரவணன், கூட்டுறவு சங்க தலைவர் அமராவதி ராஜேந்திரன், ஊராட்சித் தலைவர் கலா முத்தழகு உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை மணிகண்டன் சிவாச்சாரியார், வல்மீகநாத குருக்கள் தலைமையில் ஏராளமான சிவாச்சாரியார்கள் நடத்தினர். 10 நாட்கள் நடைபெறும் இக்கோவில் திருவிழாவில் தினமும் காலை மாலையில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, அன்ன வாகனத்தில் சுவாமி அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

திருக்கல்யாணம்

29-ந் தேதி சுவாமி அம்மன் திருக்கல்யாணம், 30-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், மே 1-ந் தேதி நந்தி, சிம்ம வாகனத்திலும், 2-ந் தேதி காமதேனு வாகனத்திலும் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது. 3-ந் தேதி 9-ந் திருநாளையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது. 4-ந் தேதி தீர்த்த வாரி உற்சவம், வெள்ளி ரிஷப வாகனம் புஷ்ப பல்லாக்கில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது.

இதனையொட்டி வாணவேடிக்கை கலை நிகழ்ச்சிகள் அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருவெற்றியூர் சரக தேவஸ்தான கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன், திருவெற்றியூர் ஸ்தானிகம் மணிகண்ட குருக்கள் மற்றும் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story