திருவாரூர்: கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


திருவாரூர்:  கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மனு அளிக்க மக்கள் குவிந்தனர். இந்நிலையில் பெண் ஒருவர் திடீரென தனது பையில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒடி வந்து தடுத்து, பெண்ணிடம் மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். மேலும் தண்ணீரை உடலில் உற்றி சமாதானப்படுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே மேலகளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மலர் (வயது 50) என தெரிய வந்தது. மேலும், இவரது கணவர் செல்வம் காலமாகிவிட்டதால் தனது மகள், மகனுடன் வசித்து வருகிறார். அவரது தாய் நாகம்மாளிடம் இருந்து விலை கொடுத்து நிலத்தை வாங்கியுள்ளார்.

அதில் விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அறுவடை நேரத்தில் திடீரென மலரின் அண்ணன் நெல்லை அறுவடை செய்து சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மலர் கொரடாச்சேரி போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மலர், தனக்கு சேர வேண்டிய சொத்தை மீட்டு தரும்படி வலியுறுத்தி தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story