திருப்பூர்: உயிரிழந்த காளை மாட்டுக்கு கோவில் கட்டும் விவசாயி


திருப்பூர்: உயிரிழந்த காளை மாட்டுக்கு கோவில் கட்டும் விவசாயி
x

வெள்ளகோவில் அருகே உயிரிழந்த காளை மாட்டுக்கு விவசாயி ஒருவர் கோவில் கட்டி வருகிறார்.

வெள்ளகோவில்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள சேனாபதி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கே.சோமசுந்தரம். இவர் கருப்பன் என்ற காளை கன்று குட்டியை 18 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். பின்னர் அந்த காளை வயது முதிர்வு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி உயிரிழந்தது.

பின்னர் உயிரிழந்த காளையின் உடலை தனது சொந்த இடத்திலேயே அடக்கம் செய்தார். அதன் பின்னர் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 10-ம் தேதி காளை அடக்கம் செய்த இடத்தில் காளையின், திருவுருவப் படத்தை வைத்து குடும்பத்தோடு சேர்ந்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி அனைவருக்கும் அன்னதானம் வழங்கி வருகிறார்.

அதேபோல் நேற்று காளையின் நினைவு தினத்தையொட்டி உயிரிழந்த காளையின் படத்தை வைத்து குடும்பத்தோடு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். தற்போது உயிரிழந்த காளை மாட்டுக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டு நினைவு தினத்திற்குள் கோவில் கட்டுமான பணி கட்டி முடிக்கப்பட்டு விடும் என விவசாயி கே.சோமசுந்தரம் தெரிவித்தார்.


Next Story