திரூப்பூர்: வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது


திரூப்பூர்:  வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
x

பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்


திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர் தற்போது பல்லடம் அருகேயுள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி இரவு நண்பரைப் பார்க்க பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை வந்துவிட்டு அங்குள்ள நால்ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.3,500 பணத்தை பிடிங்கிக் கொண்டு சென்றுவிட்டனர். இதையடுத்து சதீஷ்குமார் பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் நேற்று காரணம்பேட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக சென்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த அவர்களை காவன் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் தான் சதீஷ்குமாரிம் வழிப்பறி செய்தவர்கள் என்பது தெரியவந்தது.மேலும் அவர்கள் சிவகங்கையை சேர்ந்த மாசானம் என்பவரது மகன் அருண்(22), அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சக்திவேல் (21) என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் பல்லடம் அருகே மதனபுரி டவுனில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 5 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story