பெண் குழந்தைகளின் நலனுக்காக பாடுபட்டவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்


பெண் குழந்தைகளின் நலனுக்காக பாடுபட்டவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 23 Aug 2023 6:45 PM GMT (Updated: 23 Aug 2023 6:46 PM GMT)

பெண் குழந்தைகளின் நலனுக்காக பாடுபட்டவர்கள் தேசிய பெண் குழந்தை விருதுபெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்

தேசிய பெண் குழந்தை விருது

ஒவ்வொரு ஆண்டும் "பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு வீர தீர செயல்புரிந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்தன்று (ஜனவரி 24) "தேசிய பெண் குழந்தை விருது" வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருதுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தகுதியுடையவர், தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்ட பெண் குழந்தையாகவும் இருக்க வேண்டும்.

வீர, தீர செயல்

விருது பெற வீர, தீர செயல் புரிந்திருக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகிவற்றுக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

மேலும் விருதுக்கான விண்ணப்பங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உட்பட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் உரிய முன்மொழிவுகளுடன் மாவட்ட சமூகநல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் பரிந்துரையுடன் சமூகநல ஆணையரகத்துக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்விருதிற்கான விண்ணப்பங்களை சமர்பிக்க இறுதி நாள் 20.11.2023 ஆகும். அதற்குப்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.


Next Story