ஒரே மேடையில் சிவன், பெருமாளுக்கு திருக்கல்யாணம்


ஒரே மேடையில் சிவன், பெருமாளுக்கு திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 27 Aug 2023 6:45 PM GMT (Updated: 27 Aug 2023 6:45 PM GMT)

நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் சிவன், பெருமாளுக்கு ஒரே மேடையில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கடலூர்

நெல்லிக்குப்பம்

பூலோக உற்சவம்

நெல்லிக்குப்பத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் 14-வது ஆண்டு நிறைவு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் அதைத் தொடர்ந்து பூலோகநாதருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் மாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதிக்கும், புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் சாமிக்கும் ஒரே மேடையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

ஒரே மேடையில்

பின்னர் மங்கள வாத்திய இசையுடன் ஒரே மேடையில் பெருமாளுக்கும், தாயாருக்கும் மற்றும் சிவனுக்கும், அம்மனுக்கும் மங்கள திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

இதில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு சுமங்கலி பிரசாதம் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகாதேவி, பூஜைக்கான ஏற்பாடுகளை குருக்கள் குமார், ஹரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.


Next Story