ராமர்-சீதை திருக்கல்யாணம்


ராமர்-சீதை திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 2 May 2023 6:45 PM GMT (Updated: 2 May 2023 6:46 PM GMT)

திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் ராமர்-சீதை திருக்கல்யாணம் நடந்தது.

ராமநாதபுரம்

திருப்புல்லாணி,

திருப்புல்லாணியில் உள்ளது ஆதிஜெகநாதர் பெருமாள் கோவில். தமிழகத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் 44-வது திவ்யதேசமாக இந்த கோவில் விளங்கி வருகின்றது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் பட்டாபிஷேகராமருக்கு சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் பட்டாபிஷேக ராமர் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றார்.

இந்த நிலையில் திருவிழாவின் 6-வது நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக ராமர்-சீதை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக ராமர் மணமகன் கோலத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளினார். சீதை மணமகள் அலங்காரத்தில் பட்டாபிஷேக ராமர் சன்னதி பிரகாரத்தில் உள்ள மணமேடையில் எழுந்தருளினார். தொடர்ந்து பட்டாபிஷேக ராமர் சீதையின் கழுத்தில் மாலை அணிவித்து திருக்கல்யாண நிகழ்ச்சியானது நடைபெற்றது.

பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியாக 9-வது நாளான நாளை காலை ராமபிரான் தேரோட்டமும், 7-ந் தேதி உற்சாக சாந்தி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.


Next Story