அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம் திருட்டு


அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம் திருட்டு
x

ஆம்பூர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் தோட்டாளம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 68). விவசாயியான இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.

அதே பகுதியில் உள்ள கட்டிட மேஸ்திரியான வெங்கடேசன் (53). வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று இருந்தார். இவரது வீட்டிலும் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருந்தனர்.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு நடந்த வீடுகளில் ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தும், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் திருடர்களை அடையாளம் கண்டு அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story