தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் நகை, பணம் திருட்டு


தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 18 April 2023 6:45 PM GMT (Updated: 18 April 2023 6:45 PM GMT)

திருப்பத்தூரில் தி.மு.க. கவுன்சிலரின் மனைவி, மகள்களை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிசென்றனர்.

சிவகங்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தி.மு.க. கவுன்சிலரின் மனைவி, மகள்களை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிசென்றனர்.

தி.மு.க. கவுன்சிலர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுத்தெருவை சேர்ந்தவர் ஜிம்கண்ணன். தி.மு.க.வை சேர்ந்த இவர் 7-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினராக உள்ளார். இவர் பணி நிமித்தமாக நேற்று முன்தினம் சென்னை சென்றார். வீட்டில் இவரது மனைவி காளீஸ்வரி, தனது 2 மகள்களுடன் தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலையில் எழுந்து கதவை திறக்க முயன்றபோது வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் இதுகுறித்து தனது கணவர் ஜிம்கண்ணனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர் பக்கத்து வீட்டினரிடம் இதுகுறித்து செல்போனில் தெரிவித்தார். இதையடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அங்கு சென்று கதவை திறந்து விட்டனர். காளீஸ்வரி வெளியே வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

நகை, பணம் திருட்டு

பின்னர் அவர் வீட்டில் ஒரு அறையில் இருந்த நகை, பணத்தை பார்த்த போது அதை காணவில்லை. மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, காளீஸ்வரி தூங்கிய அறை கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. மொத்தம் 16 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் திருடு போனதாக கூறப்படுகிறது. மேலும் ஜிம் கண்ணனின் மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து அவர் திருப்பத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாதன், இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வபிரபு, பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணை

சிவகங்கை கைரேகை நிபுணர் துறை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் யூசூப் தலைமையிலான கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் இதே தெருவில் கமலம் என்பவர் குடும்பத்தினருடன் ராமேசுவரம் கோவிலுக்கு சென்ற நேரத்தில் அவருடைய வீட்டு கதவை உடைத்து ரூ.5 ஆயிரத்து 500-ஐ மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story