மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு


மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு
x

கோப்புப்படம் 

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கலுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லில் தற்போது 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிரதான அருவி மற்றும் காவிரி கரைகளில் குளித்து மகிழ்கிறார்கள். ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை 2 ஆயிரத்து 107 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 2 ஆயிரத்து 141 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று முன்தினம் 100.27 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 99.59 அடியாக சரிந்தது . இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து 98.91 அடியானது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் 1½ அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



Next Story