விழுப்புரம் போலீஸ் சரகத்தில்கள்ளச்சாராய விற்பனை முழுமையாக தடுக்கப்படும்புதிதாக பொறுப்பேற்ற டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் பேட்டி


விழுப்புரம் போலீஸ் சரகத்தில்கள்ளச்சாராய விற்பனை முழுமையாக தடுக்கப்படும்புதிதாக பொறுப்பேற்ற டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் பேட்டி
x
தினத்தந்தி 21 May 2023 6:45 PM GMT (Updated: 21 May 2023 6:46 PM GMT)

விழுப்புரம் போலீஸ் சரகத்தில் கள்ளச்சாராய விற்பனை முழுமையாக தடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் கூறினார்.

கள்ளக்குறிச்சி


விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பணியிடம் சுமார் ஓரு மாதமாக காலியாக இருந்தது. இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்த ஜியாவுல்ஹக் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று விழுப்புரத்தில் உள்ள போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பின்னர் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

விழுப்புரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் சட்ட விரோத செயல்கள், குற்ற சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக கள்ளச்சாராயம், சாராயஊரல், லாட்டரி, சூதாட்டம், ரவுடியிசம் போன்ற சம்பவங்கள் முழுமையாக தடுக்கப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை. பொதுமக்கள் அளிக்கும் தகவல்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும். அவர்களின் பெயர் ஏதும் வெளியிடப்படமாட்டாது. எனவே பொதுமக்கள் சட்டவிரோத செயல்களை தடுக்க காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ரவுடியிசம் ஒழிக்கப்படும்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள் மற்றும் போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். சிவில் வழக்குகளை தவிர குற்றவழக்குகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடியிசம் ஒழிக்கப்பட்டு தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில், சாராயம் கடத்தலை தடுக்க ஏற்கனவே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனை சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு

கள்ளச்சாராயம் குறித்து கிராமப்புறங்களில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாராம்(கடலூர்), மோகன்ராஜ்(கள்ளக்குறிச்சி) மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story