துணை முதல்-அமைச்சர் பதவி ? உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
தி.மு.க. இளைஞரணியின் 45-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது.
சென்னை,
தி.மு.க. இளைஞரணியின் 45-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டையில் இன்று நடைபெற்றது. இதற்கு மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
மக்களவைத் தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 40க்கு 40 வெற்றியை கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. தி.மு.க.வுக்கு பெண்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன . மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம் ஆகியவை பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
தி.மு.க.வில் எத்தனை அணிகள் இருந்தாலும் இளைஞரணியே முதன்மையான அணி. தான் துணை முதல்-அமைச்சராகப் போவதாக வரும் செய்திகள் வதந்திகளே. அனைத்து அமைச்சர்களும் முதல்-அமைச்சருக்கு துணையாக தான் இருப்போம். தி.மு.க. அமைப்பாளர்கள் அனைவரும் முதல்-அமைச்சருக்கு துணையாக தான் இருப்போம் . எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும், தனது மனதிற்கு மிக மிக நெருக்கமான ஒரு பொறுப்பு என்றால் அது இளைஞரணி செயலாளர் பொறுப்பு தான். என தெரிவித்தார்.