கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த 'நீட்' தேர்வு


கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த நீட் தேர்வு
x

நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நேற்று நடந்து முடிந்தது. வினாத்தாளை பொறுத்தவரையில் இயற்பியல் பிரிவில் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

கடலூர்

நீட் தேர்வு

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகியவற்றில் இளநிலை படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இளநிலை படிப்புகளுக்கும், ராணுவ நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் 'நீட்' நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அவ்வாறு தேர்ச்சி பெறும் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மேற்சொன்ன மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பை, தேர்வை நடத்தக்கூடிய தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

இந்த தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவர்கள், 9 லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவிகள், 13 திருநங்கைகள் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

ஆபரணங்கள்

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 95 ஆயிரத்து 824 மாணவிகள், 51 ஆயிரத்து 757 மாணவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டு, நாடு முழுவதும் 499 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, நேற்று தேர்வு நடந்தது. தேர்வை எழுதும் மாணவ-மாணவிகள் பிற்பகல் 1.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வர அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி, தேர்வு மையத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

அதன்படி, மாணவ-மாணவிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாணவிகளை பொறுத்தவரையில் ஆபரணங்கள் அணிந்து வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதனால் மாணவிகள் அணிந்து வந்த காதணி, மூக்குத்தி, மோதிரம், சங்கிலி, கொலுசு போன்ற ஆபரணங்களை கழற்றி பெற்றோர் வசம் ஒப்படைத்துவிட்டு சென்றனர்.

கடும் கட்டுப்பாடுகள்

இதேபோல், தலைமுடி விரித்தபடி இருந்தால் மட்டுமே மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சடைபின்னலுடன் வந்த மாணவிகளை வலுக்கட்டாயமாக முடியை விரிக்க சொன்ன நிகழ்வும் நடந்தது. இதனால் மாணவிகள் தலைவிரி கோலத்துடன் தேர்வு அறைக்குள் சென்று தேர்வை எழுதினார்கள். மேலும் தடிமனான காலணி அணிந்து வந்தவர்களையும் அனுமதிக்கவில்லை.

மாணவர்களை பொறுத்தவரையில் ஷூ அணிந்து வந்தவர்கள், 'பெல்ட்' அணிந்து வந்தவர்கள், பெரிய பட்டனுடன் கூடிய ஆடை அணிந்துவந்தவர்கள், கை மற்றும் கழுத்தில் கயிறு அணிந்திருந்தவர்களை திருப்பி அனுப்பினர். பின்னர், அவர்கள் அதை கழற்றிவிட்டு, சரியாக வந்த பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது.

கடலூர் மாவட்டத்தில் 4,503 பேர் எழுதினர்

கடலூர் மாவட்டத்தை பொருத்தவரை இந்த நீட் தேர்வை எழுத 4 ஆயிரத்து 602 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

கடலூர் சி.கே. பள்ளி, விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி, கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கடலூர் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி, பண்ருட்டி பணிக்கன்குப்பம் செயின்ட் பால் பப்ளிக் பள்ளி, கடலூர் துறைமுகம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா பள்ளி, ஸ்ரீமுஷ்ணம் தென்பாதி எஸ்.பி.ஜி.வித்யாலயா பள்ளி ஆகிய 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு வந்த தேர்வர்கள் சற்று பரபரப்புடனேயே காணப்பட்டனர். தேர்வர்களைவிட அவர்களை அழைத்து வந்திருந்த பெற்றோரே அதிக பதற்றத்துடன் இருந்தனர்.

720 மதிப்பெண்

பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு மையத்துக்கு தேர்வர்கள் வர அறிவுறுத்தப்பட்டதால், சரியாக 1.30 மணிக்கு அனைத்து தேர்வு மையங்களின் நுழைவுவாயில் கதவுகள் மூடப்பட்டன. அதன் பின்னர் தேர்வு எழுத வந்தவர்கள் யாரையும் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5.20 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த தேர்வை 4,503 மாணவ-மாணவிகள் எழுதினர். 99 பேர் தேர்வு எழுத வரவில்லை. மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டு, அதில் 180 வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு வினாவுக்கும் 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு தேர்வு மதிப்பெண் கணக்கிடப்படும் என்றும், தவறாக விடையளித்திருந்தால், அந்த வினாவுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தேர்வு எப்படி இருந்தது?

தேர்வை பொறுத்தவரையில், 'இயற்பியல் பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாகவும், வேதியியல் பகுதி வினாக்கள் ஓரளவு எளிதாக இருந்ததாகவும், உயிரியல் பிரிவில் வினாக்கள் அனைத்தும் எளிதாக கேட்கப்பட்டிருந்ததாகவும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வினாக்கள் சற்று எளிதாக கேட்டிருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர். அதிலும் 2-வது மற்றும் 3-வது முறையாக நீட் தேர்வை எழுதும் தேர்வர்கள் இந்த வினாக்களுக்கு பதிலை எளிதில் எழுதியிருப்பார்கள் என்றே சொல்லப்படுகிறது.


Next Story