அரசு பள்ளியில் ஏற்றியஉடன் இறக்கப்பட்ட தேசியக்கொடி


அரசு பள்ளியில் ஏற்றியஉடன் இறக்கப்பட்ட தேசியக்கொடி
x

அரசு பள்ளியில் ஏற்றியஉடன் இறக்கப்பட்ட தேசியக்கொடியால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகே ரெட்டிபாளையம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து 150- க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வம் உள்பட 9 ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை ரெட்டிபாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தலைமையில் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றி கொண்டப்பட்டு, மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. நடந்து முடிந்து சிலமணி நேரத்திலேயே தேசிய கொடி இறக்கப்பட்டு கயிற்றுடன் வெறும் கம்பம் உள்ளது. மேலும் இது குறித்து விசாரித்தபோது மாலையில் வந்து தேசியகொடியை இறக்கி எடுத்து வைக்க ஆள் இல்லாத காரணத்தால் தலைமை ஆசிரியர் ஏற்றி சில மணி நேரத்திலேயே தேசிய கொடியை இறக்கி பள்ளியில் வைத்து சென்றுள்ளார் என தெரிவித்தனர். பாரதபிரதமர் நரேந்திர மோடி 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பே வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என கூறியதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தி உள்ளனர். அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதையும் செலுத்தப்பட்டது. இந்நிலையில் முக்கிய இடமான பள்ளியில் தேசிய கொடியை ஏற்றிய உடன் இறக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் மீண்டும் பள்ளி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.


Next Story