விவசாயியிடம் நூதன முறையில் பணம் அபேஸ்


விவசாயியிடம் நூதன முறையில் பணம் அபேஸ்
x

விவசாயியிடம் நூதன முறையில் பணம் அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள தளவானூரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 43), விவசாயி. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்பு கொண்டு பேசிய நபர், தான், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு கடனுதவி தேவையெனில் உங்களுடைய விவரங்களை வாட்ஸ்-அப் எண்ணில் அனுப்பி வைக்குமாறு கூறி ஒரு வாட்ஸ்-அப் எண்ணை கொடுத்தார். அதன்படி அந்த வாட்ஸ்-அப் எண்ணுக்கு தன்னுடைய விவரங்களை அமிர்தலிங்கம் அனுப்பியுள்ளார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து அமிர்தலிங்கத்தை தொடர்பு கொண்ட நபர், உங்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு கடன் ஒப்புதல் ஆகிவிட்டதாகவும், அதனை வங்கி கணக்கில் செலுத்துவதற்காக வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண் ஆகியவற்றை கேட்டார். இதனை உண்மையென நம்பிய அமிர்தலிங்கம், தனது வங்கி கணக்கு எண் மற்றும் ஏ.டி.எம். அட்டை எண் கொடுத்ததோடு அவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாக வந்த ஓடிபி எண்ணையும் அந்த நபரிடம் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அமிர்தலிங்கத்தின் வங்கி கணக்கில் இருந்து 3 தவணைகளாக ரூ.49 ஆயிரம் எடுக்கப்பட்டு விட்டதாக அமிர்தலிங்கத்தின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story