மனசு சரியில்லை... கடிதம் எழுதிவைத்து டாக்டர் தற்கொலை...!


மனசு சரியில்லை... கடிதம் எழுதிவைத்து டாக்டர் தற்கொலை...!
x

ஈரோட்டில் மயக்க மருந்து ஊசி செலுத்தி டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மேவானியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது39). இவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிறுநீரக சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பூர்ணிமா. இவர்களுக்கு இனியன் (10) என்ற மகன் உள்ளான். பூர்ணிமா எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு நோயியல் நிபுணர் மேற்படிப்புக்காக ஆமதாபாத்தில் தங்கியிருந்து படித்து வருகிறார்.

டாக்டர் சக்திவேல் ஈரோடு புதிய ஆசிரியர் காலனியில் தனது பெற்றோர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இனியனுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளதால், மதுரையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தான். மேலும் டாக்டர் சக்திவேலின் பெற்றோர் மேவானிக்கு சென்றிருந்தார்கள். இதனால் அவர் மட்டும் வீட்டில் இருந்து வந்தார்.

மயக்க மருந்து ஊசி

நேற்று காலையில் சக்திவேல் பணிக்கு செல்லவில்லை. இதனால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் டாக்டர் சக்திவேலின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போனை எடுத்து பேசவில்லை. எனவே ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் சக்திவேல் மயங்கிய நிலையில் கிடந்தார். அருகில் மயக்க மருந்து ஊசி கிடந்தது. உடனடியாக அவர்கள் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சக்திவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கடிதம் சிக்கியது

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார், டாக்டர் சக்திவேலின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, டாக்டர் சக்திவேல் தனக்குத்தானே மயக்க ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் அந்த வீட்டில் சக்திவேல் எழுதி வைத்த ஒரு கடிதத்தை கைப்பற்றியதாகவும், அந்த கடிதத்தில் ''என்னுடைய சாவுக்கு நானே காரணம். எனக்கு மனசு சரியில்லாததால் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது'' என்று எழுதி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story