உருமாறி மிரட்டும் கொரோனா 'ஓமைக்ரான் பி.எப்.7'- மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அவசியமா?


உருமாறி மிரட்டும் கொரோனா ஓமைக்ரான் பி.எப்.7- மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அவசியமா?
x

கொரோனா நோய்க்கிருமி அழிவே இல்லை என்பது போல் உருமாறி பரவி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.

புதுக்கோட்டை

உலகம் ஓலமிட்டது

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா நோய்த்தொற்று முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் அழையா விருந்தாளியாக அனைத்து நாடுகளிலும் ஊடுருவி சமூகப்பரவலாக மாறியது. உலகமே ஓலமிட்டு அழும் வகையில் அந்த கொடிய நோய் தொற்றுக்கு சுமார் 45 லட்சம் பேர் உயிர் இழந்தனர். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டிலும் அதன் பீதி அனைவரையும் தொற்றி இருந்தது.

முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாகக் கடைபிடிக்கப்பட்டன. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் கொரோனா தொற்று பரவலின் வேகத்துக்கும், வீரியத்துக்கும் முட்டுக்கட்டை விழுந்தது. அதனால் நோய் பற்றிய அச்சம் மக்கள் மனதில் மெல்ல, மெல்ல விலகியது. நாளடைவில் கொரோனா வைரசை சாதாரண காய்ச்சல் போன்று மக்கள் கருதத்தொடங்கினர். எனவே முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நடைமுறைகள் உதாசீனப்படுத்தப்பட்டன.

புது வடிவம்

கொரோனா கிருமி ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஓமைக்ரான் என புதுப்புது வடிவில் உருமாறி அச்சுறுத்தினாலும் மக்கள் கவலை கொள்வதாக இல்லை. இந்த நிலையில் கொரோனா கிருமியை உலகிற்கு அறிமுகம் செய்த சீனாவில் 'ஓமைக்ரான் பி.எப்.7' என்ற வடிவில் கொரோனா புதிய உருவம் எடுத்துள்ளது. இந்த நோய்க்கிருமி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஊடுருவிவிட்டது. வீரியமான கொரோனா தொற்று போன்று இந்த கிருமியும் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. உலக சுகாதார அமைப்பும் தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது.

அவசர ஆலோசனை

இந்த நிலையில் இந்தியாவில் ஓமைக்ரான் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார். தமிழ்நாட்டிலும் இந்த நோய்க்கிருமி நுழைந்து விடாது தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள், கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.

இது பற்றிய மருத்துவ நிபுணர், பொதுமக்களின் பார்வை வருமாறு:-

வைரசின் வீரியம் அதிகம்

விராலிமலையை சேர்ந்த ஜெயபால்:- கடந்த முறை கொரோனாவால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. அதனை எதிர்கொண்டு மீண்டெழுந்து வந்ததிலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியது. அப்போது கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பொதுமக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாக வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது இந்நோய் குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்பட்டு உள்ளது. தமிழக சுகாதார துறையும் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போதுவரை சிலர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிந்து செல்வதை காணமுடிகிறது. தற்போது வெளிநாடுகளில் பரவி வரும் வைரசின் வீரியம் அதிகம் இருப்பினும் அனைவருக்கும் இந்நோய் குறித்த விழிப்புணர்வு இருப்பதால் இந்தமுறை கொரோனா தொற்றை எதிர்கொள்வதில் சிரமம் இருக்காது. இருப்பினும் அரசு உடனடியாக இப்போதிலிருந்தே மாநில எல்லைகளில் கண்டிப்பாக பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தவும், பொதுமக்கள் முக கவசம் அணிவதை கட்டாயப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் முழு ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும்.

முககவசம் அணிய வேண்டும்

விராலிமலையை சேர்ந்த அகிலாண்டேஸ்வரி:- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இல்லாவிட்டாலும் முன்கூட்டியே கட்டுப்பாட்டு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் கடந்த கால நிகழ்வுகள் நமக்கு பாடமாக உள்ளது. முககவசம் ஒன்றே கொரோனா பரவலை தடுக்க ஒரே வழி. முதலில் அனைத்து பள்ளிகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் என கூட்டம் அதிகமாக சேரும் இடங்கள் அனைத்திலும் இப்போதிலிருந்தே முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்த வேண்டும். பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து கடைப்பிடிக்க வேண்டும். அப்படி பின்பற்றினால் கொரோனா முழு ஊரடங்கு இல்லாமல் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்காமல் இருக்கும்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

ஆவூர் எஸ்.பி.நகரில் மளிகை கடை வைத்துள்ள ஆரோக்கியராஜ்:- முக கவசம் அணிவதால் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் என்று பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். அரசாங்கம் கொரோனா தளர்வுகள் அறிவித்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் நகர்புறங்களில் 30 சதவீத மக்கள் தற்போதும் முக கவசம் அணிந்து கொண்டு தான் வெளியே செல்கிறார்கள். தற்போது மீண்டும் கொரோனா பரவல் இருக்கக்கூடும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் மீண்டும் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறினால் நகர்ப்புறங்களில் 90 சதவீதத்திற்கு மேல் பொதுமக்கள் முக கவசம் அணிவார்கள். ஆனால் கிராமப்புறங்களில் இன்னும் போதுமான அளவிற்கு விழிப்புணர்வு இல்லாததால் முக கவசம் அணிவது குறைந்துள்ளது. பொதுமக்களுக்கு கொரோனாவினால் உயிர் பயம் இருப்பதால் அரசு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை தவிர்த்து முக கவசம் அனைவரும் அணிய வேண்டும் என்பதை மிகக் கடுமையாக கட்டாயப்படுத்தினால் அனைவரும் முக கவசம் அணிவார்கள். அதற்கு கிராமப்புறங்களில் இன்னும் விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

புதுக்கோட்டையை சேர்ந்த ஆசிரியர் மீனாட்சி சுந்தரம்:- '' சீனாவில் உருவான கொரோனாவான பி.எப்.7 பற்றி தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி தங்களது பெற்றோரிடமும் தெரிவிக்க அறிவுறுத்துகிறோம். உங்களது வீட்டில் பெற்றோர் கொரோனா தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி செலுத்தவும், 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படியும் அறிவுறுத்தும்படி மாணவர்களிடம் தெரிவிக்கிறோம். ஏற்கனவே கொரோனா காலக்கட்டத்தில் அரசின் வழிமுறைகளை பின்பற்றி தான் பள்ளிகள் செயல்பட்டது. அதுபோல தற்போதும் அரசின் வழிகாட்டுதல்களை பள்ளியில் செயல்படுத்துவோம்''.

கொரோனா தடுப்பூசி

புதுக்கோட்டையை சேர்ந்த டாக்டர் சலீம்:- ''வெளிநாடுகளில் திடீரென அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். பீதி அடைய வேண்டாம். எச்சரிக்கையுடன் இருந்தால் போதும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிதல், கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவற்றை மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும். தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு சார்பில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மீண்டும் இலவசமாக முகாம் அமைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால் உடனடியாக டாக்டரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மேலும் கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டால் மருத்துவமனைக்கு நேரில் சென்று டாக்டரின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும். தாங்களாக சுய சிகிச்சை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்''.

மருத்துவ இயக்குனர்

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வ விநாயகம்:- கொரோனா தொற்று பற்றி அச்சம் கொள்ளாமல் தைரியமாகவும், பாதுகாப்பாகவும் மக்கள் இருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஓமைக்ரான் பி.எப்.5 கிருமி பரவியது. அதனை நாம் எளிதில் கடந்து வந்துவிட்டோம்.

தற்போது ஓமைக்ரான் பி.எப்.7 கிருமி பரவுகிறது. இந்த வைரஸ் கிருமி பரவல் வேகம்தான் அதிகம் இருக்கிறது. பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் 96 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர். இதன் மூலம் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது. இதனால் புதிய வகை கொரோனா பரவலை பற்றி யாரும் பயப்படத் தேவையில்லை.

அதே நேரத்தில் இன்னும் கொரோனா கிருமி முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பொது இடங்களுக்கு செல்வதை முதியோர்கள் முடிந்தளவு தவிர்க்க வேண்டும். அதேப்போன்று சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பண்டிகை காலங்கள் வருவதால் பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிவது நல்லது. முக கவசம் கொரோனா பரவலில் இருந்து மட்டுமல்ல காற்றில் பரவும் நோய்களில் இருந்தும் பாதுகாக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கொரோனா பாதிப்பு ஒரு பார்வை...

இந்தியாவில் இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 42 ஆயிரத்து 432 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். இந்த நோய் தொற்றுக்கு 5 லட்சத்து 30 ஆயிரத்து 681 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசிகள் வந்த பின்னர் கொரோனா கொட்டம் அடங்கியது.

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள், 15-18, 12-14 வயது உள்ளவர்கள் என பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முதல் தவணை, 2-வது தவணை, பூஸ்டர் என 3 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இதுவரை 220 கோடியே 2 லட்சத்து 12 ஆயிரத்து 178 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

21.12.2022 அன்றைய நிலவரப்படி இந்தியாவில் 3 ஆயிரத்து 402 பேர் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

தமிழ்நாடு

தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை 35 லட்சத்து 94 ஆயிரத்து 328 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 ஆயிரத்து 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 12 கோடியே 74 லட்சத்து 16 ஆயிரத்து 815 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் 21.12.2022 அன்று நிலவரப்படி 45 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கடந்த 8 மாதங்களாக கொரோனா உயிரிழப்பு இல்லை என்பதும் கவனித்தக்கது.


Next Story