கார் டிரைவரை தாக்கி செல்போன், மொபட் பறிப்பு


கார் டிரைவரை தாக்கி செல்போன், மொபட் பறிப்பு
x

கார் டிரைவரை தாக்கி செல்போன், மொபட்டை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

திருச்சி

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது 22). இவர் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சபரிமலைக்கு சவாரிக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு வந்த இவர், டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் இருந்து மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பெல்ஸ் மைதானம் பகுதியில் வந்தபோது 3 பேர் அவரை தாக்கி, அவரிடம் இருந்து செல்போன், மொபட் மற்றும் பணத்தை பறித்து சென்றனர். இதில் மயங்கி விழுந்த அவரை அந்தவழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலக்கரை முதல் சங்கிலியாண்டபுரம் செல்லும் வழியில் காஜாப்பேட்டை பகுதியிலும், பெல்ஸ் மைதானம், சங்கிலியாண்டபுரம் பகுதிகளிலும் அடிக்கடி வாகனங்களில் வருவோரை ஆயுதங்களை காட்டியும், கடுமையாக தாக்கியும் உடமைகளை மர்ம நபர்கள் பறித்து செல்வது வாடிக்கையாகிவிட்டது. பணம், பொருள் வாகனங்களை பறிகொடுத்தோர் போலீஸ் நிலையங்களுக்கு அலைவதை நினைத்து புகார் கொடுக்காமலேயே இருந்து விடுகின்றனர். இதுமட்டுமின்றி செந்தண்ணீர்புரத்தில் இருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ்சாலை வழியாக பால்பண்ணைக்கும், பால்பண்ணையில் இருந்து செந்தண்ணீர்புரத்துக்கும் வரும் சர்வீஸ் சாலை பகுதியிலும் இதுபோல் வழிப்பறி தினமும் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


Next Story