பச்சிளம் குழந்தையை தாயிடமிருந்து பறித்துச் செல்ல முயன்ற வடமாநில வாலிபர்..!


பச்சிளம் குழந்தையை தாயிடமிருந்து பறித்துச் செல்ல முயன்ற வடமாநில வாலிபர்..!
x

ஓசூர் அருகே பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை, தாயிடமிருந்து கடத்த முயன்ற வடமாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஓசூர்:

ஓசூர் அரசனட்டி பகுதியை சேர்ந்தவர் அபினவ் (வயது 30). இவர் அப்பகுதியில் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி நதியா. இவருக்கு 7 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் இன்று நதியாவும் அவரது தாய் வள்ளி என்பவரும் வீட்டின் முன்பு பச்சிளம் குழந்தையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர்.

அப்போது, அவர்களின் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் நதியாவின் கையிலிருந்த குழந்தையை பறிக்க முயற்சித்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த நதியாவும் அவரது தாய் வள்ளியும் சத்தமிட்டவாறு வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போதும் அந்த இளைஞர், அவர்களை பின்தொடர்ந்து வீட்டிற்குள் புகுந்து குழந்தையை அவர்களிடமிருந்து பறிக்க முயன்றார்.

இதனால் பதறிப்போன அவர்கள் இருவரும் கூக்குரலிட்டு சத்தம் போட்டுள்ளனர். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நதியாவின் வீட்டிற்கு சென்று குழந்தையை பறிக்க முயன்ற வடமாநில வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து அறிந்த குழந்தையின் தந்தை அபினவ் அங்கு சென்று, ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடமிருந்து அந்த வடமாநில வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒசூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் இருந்து கீழே இறங்க மறுத்த அந்த வாலிபர் கட்டையால் அனைவரையும் தாக்க பாய்ந்தார். இதனையடுத்து அங்கு நின்றவர்கள் அவரை வலுக்கட்டாயமாக அவசர வார்டுக்கு அழைத்து சென்றனர்.

பச்சிளம் குழந்தையை பறிக்க முயன்ற நபர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த முதரு பாஸ்கி என்பவரது மகன் பரகஷ் பாஸ்கி என்பதும் அவரது ஆதார் கார்டு மூலம் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பச்சிளம் குழந்தையை தாயிடம் இருந்து, வட மாநில வாலிபர் பறித்து கடத்த முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story