கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்


கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 27 Aug 2023 11:00 PM GMT (Updated: 27 Aug 2023 11:00 PM GMT)

கூடலூரில் இரவில் சுற்றித்திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் இரவில் சுற்றித்திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இரவில் சுற்றித்திரியும் கரடி

கூடலூர் நகருக்குள் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து வருகின்றன. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாலுகா அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையம் பகுதியில் கரடி இரவு 1 மணி அளவில் நடமாடி வருகிறது. நள்ளிரவு என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாத சூழலில், அந்த வழியாக டிரைவர் ஒருவர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் நடமாடிய கரடி போலீஸ் நிலையத்திற்கு சென்றது. இதை பார்த்த அவர் தொடர்ந்து போலீசாரை உஷார்படுத்தினார். பின்னர் நிலைய வளாகத்துக்குள் கரடி அங்கும், இங்குமாக சுற்றி வந்தது. இதனால் போலீசார் அச்சமடைந்தனர். பின்னர் கரடி அங்கிருந்து சென்றது. இந்தநிலையில் 2-வது நாளாக முத்தமிழ் நகர் பகுதியில் இருந்து எம்.ஜி.ஆர்.நகர் வழியாக நர்த்தகி நோக்கி கரடி சாலையில் நடந்து செல்வது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது.

பிடிக்க வேண்டும்

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல் இரவில் கரடி நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதனால் ஊருக்குள் நடமாடும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கூடலூருக்குள் இதுவரை இல்லாத வகையில் கரடி நடமாட்டம் உள்ளது. வழிதவறி ஊருக்குள் வந்து இருக்கலாம். இதைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட வேண்டும். இல்லையெனில் பகல் நேரத்திலும் கரடி வர வாய்ப்புள்ளது. எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story